பேஸ்புக்கை விட 'மோடி ஆப்'தான் அதிக தகவலை திருடியது.. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: பிரதமர் மோடியின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பொதுமக்களின் தகவலை திருடி அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி திடுக்கிடும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது மோடி ஆப் குறித்து பிரச்சனை உருவாகி இருக்கிறது. பேஸ்புக்கை விட இதில் அதிக தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
பாஜக குற்றச்சாட்டு
பேஸ்புக் மோசடியில் பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. பாஜக கட்சியின் தேர்தல் வெற்றிக்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா வேலை செய்தது என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆதாரங்களை சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
மோடி ஆப்
ஆனால் இந்த பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனை உருவாகி இருக்கிறது. பேஸ்புக் போலவே பிரதமர் மோடியின், அதிகார்பூர்வ ''மோடி ஆண்ட்ராய்ட் ஆப்'' மக்களின் தகவல்களை வெளியிட்டு இருப்பதாக புகார் வெளிவந்து இருக்கிறது. இதற்கான ஆதாரங்களை சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.
எலியாட் ஆண்டர்சன்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் என்பவர் இந்த புகாரை முதலில் தெரிவித்தார். அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மோடி ஆப் இந்திய மக்களின் தகவல்களை வெளியிடுவதாக கூறினார். ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் இவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
|
ராகுல் காந்தி
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி '' ஹாய். என் பெயர் நரேந்திரமோடி. நான் இந்தியாவின் பிரதமர். எனது அதிகாரப்பூர்வமான அப்ளிகேஷனில் நீங்கள் நுழையும் போது, உங்களுடைய தகவல்கள் எல்லாவற்றையும் திருடி நான் என் அமெரிக்க நண்பர்களுக்கு கொடுத்துவிடுவேன். எப்போதும் போல் இந்த முக்கியமான பிரச்சனையை மறைத்த மீடியாக்களுக்கு நன்றி'' என டிவிட்டரில் கூறியுள்ளார்.