தீவிரவாதம்.. உள்துறை செயலாளருடன் நரேந்திர மோடி ஆலோசனை
டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலாளருடன் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தி உள்ளார்.
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி ஏற்கனவே தனது அரசுமுறை பணிகளை ஆரம்பித்துவிட்டார். அதிகாரிகளிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டறிந்ததைபோல உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமியை சந்தித்து பாதுகாப்பு நிலவரங்களை மோடி கேட்டறிந்துள்ளார். அடுத்த 100 நாட்களில் எடுக்க வேண்டிய செயல் திட்டங்களை வகுக்கும் பொறுப்பையும் அனில் கோஸ்வாமியிடம் அளித்துள்ளார் மோடி.
இதில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், உள்நாட்டு பாதுகாப்பு, மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நல்லுறவு, இடதுசாரி தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுப்பது ஆகியவற்றில் பூஜ்ய அளவுக்கு பொறுமை காப்பது என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்களை உள்ளடக்கி 100 நாள் செயல் திட்டம் தயாரிக்கும் பொறுப்பை உள்துறை செயலாளருக்கு மோடி அளித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது உளவுத்துறை முன்னாள் தலைவர் அஜித் தோவல் உடனிருந்தார். நாடு தற்போது சந்தித்துள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து அஜித் தோவல், மோடிக்கு தெரிவித்துள்ளார்.