வங்கதேசத்துடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா- ராஜ்யசபாவில் இன்று தாக்கல்!!
டெல்லி: வங்கதேசத்துடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கதேசத்துடனான நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதாவுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதுதொடர்பான மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நில எல்லை வரம்பு ஒப்பந்த மசோதா அரசியல் சட்டத்திருத்த மசோதா என்பதால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மேலும் தொடர்புடைய மாநில சட்டசபைகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த மசோதா 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அப்போதைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அப்போது லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இம்மசோதாவில் அஸ்ஸாமின் சில பகுதிகளையும் சேர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனால் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட இம்மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இந்த மசோதா குறித்தும் மசோதா வரம்பிற்குள் அஸ்ஸாமின் சில பகுதிகளை கொண்டு வருவது தொடர்பாகவும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா தலைவர்களுடன் விவாதித்தனர்.
பா.ஜ.க, தலைவர் அமித்ஷாவின் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மசோதாவின் வரம்பிற்குள் மேற்குவங்கம், திரிபுரா மற்றும் மேகாலாயாவின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதைப் போல அஸ்ஸாமின் சில பகுதிகளையும் சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து நில எல்லை வரம்பு ஒப்பந்தம் தொடர்பான மசோதாவுக்கு நேற்று காலை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதது. இந்த மசோதா நிறைவேறினால் நம் நாட்டிலிருக்கும், அதேநேரத்தில் வங்க தேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் இந்தியாவிடமும், வங்கதேச பகுதியில் நம் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் அந்நாட்டிடமும் ஒப்படைக்கப்படும். இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.