அமைச்சர் பதவியேற்ற கையோடு சர்ச்சையில் சிக்கிய உமாபாரதி!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி பதவி ஏற்ற கையோடு 'ட்விட்டர்' சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்கள் 45 பேரும் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களுக்கான துறை விவரங்கள் நள்ளிரவு வரை அறிவிக்கப்படாமல் இருந்தது.
அதே நேரத்தில் அமைச்சர் பதவி ஏற்ற கையோடு உமாபாரதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவருக்கு நீர்வளம் மற்றும் கங்கையை தூய்மைப்படுத்தும் துறை ஒதுக்கப்பட்டுவிட்டதாக பதிவிடப்பட்டது.
பின்னிரவு வரையும் இப்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் வேறு வழியில்லாமல் உமாபாரதியே, தமது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த அந்த பதிவை நீக்கிவிட்டார். தமது அலுவலகப் பணியாளரே அப்படி ஒரு தகவலை தவறுதலாக பதிவு செய்துவிட்டார் .. தமக்கு என்ன துறை என்பது பற்றி எதுவும் தெரியாது என்றும் உமாபாரதி அதில் தெரிவித்துள்ளார்.