அமைச்சரவை ஒதுக்கீட்டில் அதிருப்திக்கு இடையே 'சிவசேனா'வின் ஆனந்த் கீதே பொறுப்பேற்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசில் தங்களுக்கு போதுமான அமைச்சர்கள் பதவி வழங்கப்படவில்லை; விரும்பிய துறையும் ஒதுக்கப்படவில்லை என்று பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனாலேயே அக்கட்சியின் மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே நேற்று தமது அமைச்சர் பொறுப்பை ஏற்காமல் இன்று பொறுப்பேற்றார்.
பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அக்கட்சி சார்பில் அமைச்சராக ஆனந்த் கீதே பதவியேற்றார். அவருக்கு கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் கீதேவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை தொடர்பாக சிவசேனா கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துறைக்கான பொறுப்பை உடனே கீதே ஏற்காமல் இருந்தார். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை மாற்றப்படவேண்டும் என தெரிவித்துள்ள கீதே, சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே இறுதி முடிவை அறிவிப்பார் என கூறியிருந்தார்.
அத்துடன் தேர்தலின்போது 3 கேபினட் அமைச்சர் பதவிகளும், 6 இணை அமைச்சர் பதவிகளும், 3 ஆளுநர் பதவிகளும் தங்களுக்கு வேண்டும் என்று பாஜக தலைமையிடம் சிவசேனா வாக்குறுதி பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது 18 எம்பிக்களை கொண்ட சிவசேனா அந்தக் கூட்டணியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதாவது மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 42 தொகுதிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றியது. சிவசேனா மட்டும் 18 தொகுதிகளை கைப்பற்றியது.
இதனால் தங்களுக்கு கூடுதல் அமைச்சர்கள், முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. இதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் தொடர்ந்தும் முகாமிட்டு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ராஜ்நாத்சிங்கோ எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.. பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறார். இதைத் தொடர்ந்து ஆனந்த் கீதே இன்று தமது அலுவலகத்துக்கு சென்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.