ஹெலிகாப்டர் ஊழல்: சோனியாவை கைது செய்யும் தைரியம் மோடிக்கு இல்லை: கேஜ்ரிவால் 'பொளேர்'
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
ஹெலிகாப்டர் ஊழலை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனியா காந்திக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கேஜ்ரிவால் பேசியதாவது:
ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகாலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
சோனியா காந்தியைப் பார்த்து மோடி அச்சப்படுகிறார். அப்படி அச்சப்படாவிட்டால் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லாமல் போனது ஏன்?.
இவ்வாறு கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.