பல கோடி பரிசுப் பொருட்களை பெண் குழந்தைகளின் கல்விக்கு வழங்கிய மோடி
காந்தி நகர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்ட 26.54 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3064 பரிசுப்பொருட்களை கடந்த ஜனவரி மாதம் அரசுக் கருவூலத்தில் சேர்ப்பித்தார்.
கடந்த 2013ம் ஆண்டில் தனக்கு கிடைத்த பரிசுகளை குஜராத் அரசு கஜானாவில் 1-1-2014 அன்று ஒப்படைத்தார் முதல்வர் நரேந்திரமோடி.
மொத்தம் ரூபாய் 26.54 லட்சம் மதிப்புள்ள 3,064 பரிசுப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
இது பதிமூன்றாவது முறையாகும். இதற்கு முன் 12 முறை தனது பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளார் மோடி.
இவை ஏலம் விடப்பட்டு பணம் அரசுக்கு சேர்க்கப்படும். ஏலத்தேதி விரைவில் அறிவிக்கப்படும். சுழற்சி முறையில் குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளிப் பொருட்கள்
தங்கம், வெள்ளி என 103 கலைப்பொருட்களுடன் (ரூ14.81 லட்சம் மதிப்பு), ரதங்கள், நாணயங்கள், வாட்ச்கள், பதக்கங்கள் போன்றவையும் அடங்கும்.
பெண் குழந்தைகளின் கல்விக்கு
இப்பொருள்கள் அனைத்தும் ஏலத்துக்கு விடப்பட்டு அதில் கிடைக்கும் தொகை பெண் குழந்தைகளின் கல்வி நிதிக்கு அளிக்கப் படுகிறது. அனைத்துப் பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காக ‘கன்யா கேலவாணி' என்னும் இயக்கம் 2003ல் ஆரம்பிக்கப்பட்டது.
கல்விக்கு முக்கியத்துவம்
‘ஒவ்வோர் ஆண்டும், பள்ளிக்கூடம் திறக்கும்போது நரேந்திர மோடியே நேரில் சென்று பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வலியுறுத்துகிறார். இதற்காக அவர் ஆண்டுக்கு ஆறு நாட்களை ஒதுக்குகிறார். நான் உங்களிடம் கேட்கும் பிச்சை ஒன்றே ஒன்றுதான். உங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள்' என்று மக்களிடம் வலியுறுத்துகிறார்.
பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு
வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும்போதே அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது. எட்டாம் வகுப்பை முடித்தவுடன், அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் அந்த மாணவிக்கு வட்டியுடன் சேர்த்துப் பணம் வழங்கப்படுகிறது.
பரிசுப் பொருட்கள்
பெண் கல்வித் திட்டத்துக்காகவே சிறப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடிக்கு முதல்வர் என்ற முறையில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணமும் இந்தப் பெண் கல்வித் திட்ட நிதியில் முழுவதுமாகச் சேர்க்கப்படுகிறது.
12 முறை அரசு கஜானாவிற்கு
இதற்கு முன் 12 முறைகள் இவ்வாறு மோடி கொடுத்திருக்கிறார். இதுவரை அவர் 18710 பொருள்களை அதாவது 18.91 கோடி மதிப்புள்ள பொருட்களை அளித்துள்ளார்.
கன்யா கேலவாணி ரதம்
பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக, கன்யா கேலவாணி ரதம் ஒன்று கிராமம் கிராமமாகச் செல்கிறது. இது பெண் கல்வியின் அவசியத்தை உணர வைக்கிறது.