தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்!
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் ஒருமனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லியில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுகவின் கணேசமூர்த்தி, பாமகவின் அன்புமணி ராமதாஸ், புதுவை முதல்வர் ரங்கசாமி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர் உட்பட 29 கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் பிரகாஷ்சிங் பாதல், சந்திரபாபு நாயுடு, பாஸ்வான், உத்தவ் தாக்கரே ஆகியோர் மோடிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு தமது உரையில், இந்த நாடு உங்களது தலைமைக்காக காத்திருக்கிறது.. வாருங்கள் வந்து தூய்மைப்படுத்துவோம் என்றார்.
பின்னர் வாழ்த்து தெரிவித்த அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.