ஜெ. உடல்நிலை குறித்து ராஜ்யசபா அதிமுக எம்.பி.க்களிடம் நலம் விசாரித்த மோடி!
ஜெயலலிதா உடல்நிலை குறித்து மோடி இன்று ராஜ்யசபா எம்பிக்களிடம் கேட்டறிந்தார்.
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ராஜ்யசபா அதிமுக எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று நலம் விசாரித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனிவார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறி அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி இதோ வருவார்! அதோ வருவார் என கடந்த 2 மாதமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் மோடி சென்னை வரவில்லை.
இந்த நிலையில் இன்று ராஜ்யசபா அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன் மற்றும் மைத்ரேயனிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்திருக்கிறார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா நலமடைந்து வருவதாக அதிமுக எம்பிக்கள் கூறியுள்ளனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் எனவும் இச்சந்திப்பின் போது மோடி புகழாரம் சூட்டியதாக அதிமுக எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.