அடிக்கடி பேசிய வள்ளுவரை காணோம்.. 2 நாள் முன்னாடி புகழ்ந்த அவ்வையாரை காணோம்.. தமிழை மறந்துட்டாரா மோடி
தமிழ் மொழி குறித்து மோடி உரையாற்றாதது வருத்தம் அளிக்கிறது
அகமதாபாத்: நம்ம பிரதமர் மோடி அடிக்கடி தமிழை புகழ்ந்து பேசி வருபவர்... தனது முக்கிய பேச்சுக்களில் எல்லாம் ஏதாவது ஒரு இடத்தில் தமிழை சேர்த்து விடுவார்... இதை வைத்து டிவிட்டரில் தமிழக பாஜகவினரும் புகழ்ந்து பேசி மோடிக்கு நமஸ்தே சொல்வது வழக்கம். ஆனால் இன்று அதி முக்கியமான நிகழ்ச்சியில் தமிழை சுத்தமாக மறந்து விட்டார் பிரதமர்.
இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது... சீன அதிபர் வந்தபோது கூட தமிழைப் பற்றி நிறையப் பேசினார். ஏன் வேட்டியே கட்டினாரே.. பார்க்கவே அசத்தலாக அது இருந்தது... பக்கா தமிழராக காட்சி தந்தார் மோடி... நம்ம ஊர் கந்தசாமி, பெரியசாமி போலவே பார்க்க அச்சு அசல் தமிழராக தெரிந்தார் பிரதமர் மோடி.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று மோடி தமிழையும் தமிழின் பெருமையையும் உரத்து சொல்ல தவறி விட்டார். இது சிந்து சமவெளி, கீழடி நாகரீகத்தின் கீழ் வந்த தமிழர்களுக்கு கொஞ்சமல்ல பெரிய ஏமாற்றம்தான்.
சபர்மதி ஆசிரமத்தை ஆச்சரியத்துடன் பார்வையிட்டார் டொனால்ட் டிரம்ப்!
தமிழ்மொழி
ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்: அது 2018ம் ஆண்டு.. இதேபோல பிப்ரவரி மாசம் 16ம் தேதி... டெல்லியின் தல்ஹோத்ரா மைதானத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார் பிரதமர் மோடி... அப்போது தமிழைப் பற்றி மிக உயர்வாக பேசியிருந்தார் மோடி. அதாவது "உலகின் மிகவும் பழமையான, அழகான மொழி தமிழ். அதில் நான் பேச முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். தமிழை கற்காமல் விட்டதற்காக வருந்துகிறேன்.
சமஸ்கிருதம்
"தமிழ், சமஸ்கிருத மொழியை விட பழமையானது, அழகானது. என்னால் அந்த மொழியில் வணக்கம் மட்டுமே சொல்ல முடிகிறது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. இது வருத்தமாக இருக்கிறது. தமிழ் மட்டுமல்ல இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் நான் உங்களுடன் பேச முடியவில்லை. இதற்காகவும் வருதுகிறேன்" என்று கூறியிருந்தார் பிரதமர். இப்போதும் கூட அப்படியேதான் கருத்தில் இருப்பார் என்று நம்பலாம்.
ஏமாற்றம்
ஆனால் அன்று சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என்று கூறிய அதே பிரதமர்தான், இன்று டிரம்ப் முன்னாடி பேசுகையில், உலகின் மிகப் பழமையான மொழி சமஸ்கிருதம் என்று கூறி அதல பல்டி அடித்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரண்டே வருஷத்தில் தடாலடி பல்டி அடித்து விட்டாரே பிரதமர் என்று தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமாகியுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன்
அதை விட இன்னொரு வருத்தம் என்னவென்றால், சமீப காலமாக எதற்கெடுத்தாலும் வள்ளுவர், பாரதியார் என்று தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டுவது மோடியின் வழக்கம். நேற்று கூட, மன் கி பாத் பேச்சில் அவ்வையார் குறித்து பேசி அசத்தியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூட இதைப் பாராட்டி கார்டு போட்டு டிவீட்டில் கலக்கியிருந்தார். ஆனால் இன்று அப்படி எதையும் மேற்கோள் காட்டவில்லை நம் பிரதமர்.
ரஜினிகாந்த்
குறிப்பாக திருவள்ளுவர் குறித்தோ, திருக்குறள் குறித்தோ அல்லது கீழடி குறித்து ஏதாவது அவர் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எதையுமே பேசாமல் தமிழையே கண்டு கொள்ளாமல் போய்விட்டார் பிரதமர். இது பெரிய ஏமாற்றம்தான்.. ஒரு வார்த்தை பேசியிருக்கலாம்.. நல்லா இருந்திருக்கும்... அமெரிக்கர்களும் தமிழின் மகத்துவத்தை புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.. நமக்குதான் கொஞ்சம் கவலையாக உள்ளது!!