ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டம்: பிரதமர் மோடி
குவஹாத்தி: நாட்டின் ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அஸ்ஸாமின் குவஹாத்தியில் இருந்து மேகலயாவின் மேண்டிபதார் வரையிலான முதலாவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் ரயில் நிலையங்கள் எப்படி இருந்ததோ அப்படியேதான் தற்போதும் இருக்கிறது.
நாட்டின் ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க விரும்புகிறோம். விமான நிலையத்தில் இருக்கும் வசதிகளை சாமானியர்கள் பயன்படுத்தும் ரயில்நிலையங்களில்தான் அதிக வசதிகள் இருக்க வேண்டும்.
முதல் கட்டமாக 10 முதல் 12 ரயில் நிலையங்களை தனியார்வசம் ஒப்படைக்க இருக்கிறோம். ஒரு வீட்டில் வாஸ்துப்படி வடகிழக்கு சரியாக அமைந்தால் அந்த வீடு நன்றாக இருக்கும். அதேபோல் நாட்டின் வடகிழக்கும் செழிப்பாக இருந்தால் நாடு வளம் பெறும்.
நாட்டின் இதர பகுதிகள் வடகிழக்கு மாநிலங்களுடன் ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்றார்.