ராஜ்யசபாவில் சத்தம் போட்டு சிரித்த காங். எம்.பி ரேணுகா சவுத்ரி.. மோடி கொடுத்த 'ஸ்டன்' ரிப்ளை!
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது உரக்க சிரித்த ரேணுகா சவுத்ரிக்கு உரிய பதிலடியை கொடுத்தார்.
டெல்லி: ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தபோது அட்டகாசமாக சிரித்த காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரியின் சிரிப்புக்கு பதிலடியாக ஸ்டன் பதில் கூறினார் பிரதமர் மோடி.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசி கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி பலமாக சிரித்தார். இதை அடுத்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு ஆட்சேபம் தெரிவித்தார்.
மேலும் ஒட்டுமொத்த நாடே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் கேலி பொருளாகி விடக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட நரேந்திர மோடி, சபாநாயகரே! ரேணுகா சவுத்ரியை எதுவும் சொல்லாதீர்கள். அவர் சிரிக்கட்டும். ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என்றார் மோடி.
ராமாயணத்தில் இப்படி பயங்க சத்தத்தோடு சிரிக்கும் பெண் கதாப்பாத்திரம் யார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மோடியின் சாதுர்யமான கிண்டல் பதிலை கேட்டதும், பாஜகவினர் சிரித்தனர். ரேணுகா சவுத்ரியால் பதில் பேச முடியவில்லை. கூட்டத் தொடர் முடிந்த பிறகு, மோடியின் விமர்சனம் குறித்து, ரேணுகா சவுத்ரி கூறுகையில், பெண்களை இழிவுப்படுத்துவது போல் மோடி பேசியுள்ளார்.
என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த மோடியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்னால் அவர் அளவுக்கு இறங்கி பேச முடியாது என்றார்.