வெற்று வார்த்தைகளின் மூலம் மக்களை ஏமாற்றிய பாஜக தோல்வியடைந்துவிட்டது: மன்மோகன் சிங்
வெறும் வெற்று வார்த்தைகளின் மூலம் மக்களை ஏமாற்றிய பாஜக தோல்வியடைந்துவிட்டது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : வெற்று வார்த்தைகளின் மூலமே மக்களை ஏமாற்றி வந்த பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் மாநாட்டு நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வருகிற காலங்களில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பலரும் தங்களது கருத்துகளை இம்மாநாட்டில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மேலும் இன்றைய நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.ஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பல சிறுதொழில் நிறுவனங்களை அழித்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அதை பாஜக மிகவும் மோசமாகக் கையாண்டு வருவதையும் குறிப்பிட்ட மன்மோகன் சிங், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாஜக எந்த அளவு சீரழித்துள்ளது என்பதையும் விளக்கிப்பேசினார்.
வெற்று வார்த்தைகளால் மட்டுமே மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வந்த பாஜக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்திச் செல்ல காங்கிரஸ் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவர் தனது உரையில் விளக்கினார்.