காவிரி மேலாண்மை வாரியம் அம்பேல்.. அம்பலமான மத்திய அரசின் சதி
டெல்லி: கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மனு செய்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம், காவிரி விவகாரத்தின் சூட்டை குறைத்து, அப்படியே நீர்த்துப்போக செய்ய மத்திய அரசு முயலுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்தது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே அதை அமைக்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம் என்பது நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படை தெரிந்தவர்களுக்கு கூட புரிவதுதான்.
தாமதம்
ஆனால், மத்திய அரசோ, ஸ்கீம் என்றால் என்ன அர்த்தம் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று விளக்கம் கேட்டுள்ளது. அதாவது, 6 வார கெடு முடிந்த பிறகுதான் இந்த விஷயத்தில் கூட விளக்கம் கேட்கிறது மத்திய அரசு. முடிந்த அளவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.
அபத்த கருத்து
இது ஒருபக்கம் என்றால், அபத்தமான மற்றொரு கருத்தை தனது மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் - கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழகத்தில் ஏன் கலவரம் வரப்போகிறது என்பது யாருக்கும் புரியாத புதிர். கர்நாடகாவில் கலவரம் வரும் என்பதால் 3 மாதகாலம் அவகாசம் கேட்பது மத்திய, கர்நாடக அரசுகளின் தோல்விதானே தவிர, சம்மந்தம் இல்லாத தமிழகம் அதனால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
மத்திய அரசு தேவையா
கலவரம் வந்துவிடும், அதனால் உச்சநீதிமன்ற உத்தரவை எங்களால் செயல்படுத்த முடியாது என்று கூறுவதற்கா, 56 இஞ்ச் மார்பு கொண்ட வீரமிக்க பிரதமர் வேண்டும் என்று மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் வேண்டுகோள்விடுத்தார்? பாகிஸ்தான், சீனாவை ஒடுக்க 56 இஞ்ச் மார்பு தேவை என கொக்கரித்து பிரச்சாரம் செய்த மோடி தலைமையிலான சர்வ வல்லமை கொண்ட மத்திய அரசால், உள் நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சும் ஒரு கலவரத்தை ஒடுக்க முடியவில்லையாம். தங்களால் ஒரு மாநில சட்டம்-ஒழுங்கை கூட கட்டுப்படுத்த முடியாது என இயலாமையை இந்த மனு மூலம் காட்டிவிட்டது மத்திய அரசு. இனிமேல் பாஜக எப்படி இந்திய மக்களிடம் தைரியமாக முகத்தை காண்பித்து பிரச்சாரம் செய்ய முடியும்?
உத்தரவை மதிக்கவில்லை
நீதிமன்ற உத்தரவை மத்திய அரசே செயல்படுத்தவில்லை எனும்போது, சாமானியர்கள் எப்படி அரசின் சட்ட திட்டங்களை மதிப்பார்கள். ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை மீறிய சாமானியரை பைக்கில் விரட்டி சென்று எட்டி உதைத்து கீழே தள்ளி, ஒரு பெண் சாவுக்கு காரணமாக இருந்த கடமைமிகு காவலர்களை கொண்ட இந்த மண்ணிலா, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசே மீறுகிறது?
காவிரி மேலாண்மை வாரியம் இல்லை
காவிரி விவகாரம் தற்போது நீருபூத்த நெருப்பாக உள்ளது. இதனால், 3 மாத காலம் தள்ளிப்போட்டு, இந்த நெருப்பை அணைக்க முயல்கிறது மத்திய அரசு. தமிழகத்தை ஏமாற்றுவது என்று முடிவெடுத்துவிட்டது மத்திய அரசு. உச்சநீதிமன்றம் அறிவித்த சில தினங்களிலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திருக்கலாம். இப்போது தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், அதை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்க மத்திய அரசு திட்டம் போட்டு காய் நகர்த்திவிட்டது பச்சையாகவே அம்பலப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படாது என தலைமை தேர்தல் ஆணையரே அறிவித்துவிட்டதால், அதை காரணம் காட்ட முடியாமல் நைசாக சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தப்புகிறது மத்திய அரசு. எனவே 100 சதவீதம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை மத்திய அரசு தவிர்க்க முயல்வது தெள்ளத்தெளிவாகிவிட்டது.