வெளிநாடுகளில் இருந்து வரும் கேரள வெள்ள நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு: மத்திய அமைச்சர்
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வரும், கேரள வெள்ள நிவாரண பொருட்களுக்கு, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) மற்றும் அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்; இது போன்ற ஒரு இடர்பாடு காலத்தில் கேரளாவுடன் மொத்த இந்தியாவும் கைகோர்க்கிறது. அடிப்படை சுங்கம் மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா நிவாரணத்திற்காக வரும் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரள நிவாரணத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள், சுங்க அதிகாரிகளால் குடோன்களில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
India stands with Kerala in this hour of need. Central Government is exempting basic customs duty and IGST for the consignments of aid and relief materials being despatched or imported from abroad for the affected people.
— Piyush Goyal (@PiyushGoyal) August 20, 2018
எனவே வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் நிவாரண பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எனவே இனிமேல் நிவாரண பொருட்களுக்கு வரி கிடையாது, என்பதுடன், அதி விரைவாக, தேவைப்படுவோரை சென்றடைவதற்கும் இந்த உத்தரவு வழிவகை செய்யும்.