உச்சகட்டக் குழப்பத்தில் இந்தியப் பொருளாதாரம்! - ராகுல் காந்தி
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் உச்சக் கட்ட குழப்பத்தில் உள்ளது. பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே பிரதானமாகக் கொண்டுள்ளனர் பாஜக ஆட்சியாளர்கள் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மூன்று நாட்கள் சுற்றுப் பயண் செய்தார் ராகுல் காந்தி. இறுதி நாளான நேற்று சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள சோடில்லா நகரில் அவர் பேசுகையில், "இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் மோடியும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நாசப்படுத்திவிட்டார்கள் என மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். கவனியுங்கள்... ஆளும் பாஜகவின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா, மனம் நொந்து போய் இதைச் சொல்லியுள்ளார். அப்படி எனில் எந்த அளவுக்கு நாட்டை சீரழித்து வைத்துள்ளனர் பாஜகவினர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் இப்போது உச்சக் கட்டக் குழப்பத்தில் உள்ளது. காரணம் இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள், உழைக்கும் மக்கள், பெண்கள் மற்றும் சாமானியர்களின் குரலை இந்த அரசு காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை.
மூர்க்கத்தனமாக தங்கள் கருத்துகளைத் திணித்து வருகிறது பாஜக அரசு. பொருளாதார விஷயத்திலும் அதுவே தொடர்வதால்தான் இந்த மோசமான நிலை," என்றார்.