அடேங்கப்பா தேர்தல் அறிவிப்பு.. மத்திய அரசின் 'பாரத்மாலா' நெடுஞ்சாலை திட்டம் முழு விவரம்!
Recommended Video
டெல்லி: நாட்டின் சாலை கட்டமைப்பை மேம்படுத்த 'பாரத்மாலா' என்ற பெயரில் புதிய சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், வங்கித் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமல் ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு போயுள்ளதாகவும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஊடக புள்ளி விவரங்களும் அதைப்போலவே சொல்கின்றன. மேலும், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அருண் ஜெட்லி, அவசரமாக இந்த ஆலோசனையை நடத்தியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
இதன்பிறகு, நிருபர்களிடம் அருண் ஜெட்லி கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக உலகின் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. வரும் ஆண்டுகளிலும் அதைத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்கள் சிறப்பான முறையில் உள்ளதால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவான நிலையிலேயே உள்ளது.
பண வீக்கம் குறைவு
பண வீக்க விகிதம், 2014ல் இருந்து, தொடர்ந்து குறைந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், அது, 4 சதவீதததுக்கு கீழாகவே இருக்கும். அன்னியச் செலாவணி கையிருப்பு, 26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.2 சதவீதமாக இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மேலும் குறையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
பாரத்மாலா திட்டம்
'பாரத்மாலா' என்ற பெயரில் ரூ.5.35 லட்சம் கோடி செலவில், நாட்டில் நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட உள்ளதாக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா கூறினார். இதன்படி 9000 கி.மீ தூரத்திற்கு பொருளாதார காரிடார் சாலைகள் அமைக்கப்படும். 6000 கி.மீ தூரத்திற்கு உள் காரிடார் மற்றும் ஃபீடர் சாலைகள் அமைக்கப்படும். 2000 கி.மீ தூரத்திற்கு உள் இணைப்பு சாலைகளும் அமைக்கப்படும். 5000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் மேம்பாடு செய்யப்படும்.
கடற்கரை சாலை
800 கி.மீ தூரத்திற்கு பசுமைவெளி எஸ்க்பிரஸ் சாலைகள், 10000 கி.மீ தூரத்திற்கு தேசிய ஹைவே மேம்பாடு திட்டத்தின்கீழும், 2000 கிமீ தூரத்திற்கு கடற்கரை மற்றும் துறைமுக இணைப்பு சாலைகளும் அமைக்கப்படும்.
நிதி கிடைப்பது இப்படித்தான்
பாரத்மாலா திட்டத்திற்காக செலவிடப்பட உள்ள ரூ.5.35 லட்சம் கோடியில், மார்க்கெட் கடன் ரூ.2.09 லட்சம் கோடிகள் ஆகும். தனியார் முதலீடு ரூ.1.06 லட்சம் கோடி. மத்திய நிதி மற்றும் டோல் வழி பங்களிப்பு மூலம் ரூ.2.19 லட்சம் கோடி நிதி பெறப்படும். 2022ம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். திட்டத்திற்காக 32 கோடி மனித நாட்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தங்க நாற்கர சாலை திட்டத்தை அறிமுகம் செய்து, 4வழிச்சாலைகளில் வளர்ச்சி ஏற்படுத்தியதை போல இந்த திட்டம் அமையும் என்று நிதித்துறை அமைச்ச வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.