டீஸ்டா செதல்வாட்டின் என்.ஜி.ஓ.வுக்கான வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான 'லைசன்ஸ்' அதிரடியாக ரத்து!!
டெல்லி: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங் டிரஸ்ட் என்ற என்.ஜி.ஓக்கு வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி உரிமத்தை உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குஜராத் அரசு புகார் அளித்தது.
இதன் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் செதல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவேத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கு செதல்வாட்டின் சப்ரங் டிரஸ்டுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. உள்துறை செயலராக இருந்த எல்.ஜி. கோயல், செதல்வாட் நிறுவனத்துக்கு எதிரான இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதனால் இந்த விவகாரம் கிடப்பில் கிடந்தது. தற்போது கோயல் தூக்கியடிக்கப்பட்டு புதிய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் செதல்வாட்டின் டிரஸ்டுக்கு வெளிநாட்டு நிதி உதவி பெற கொடுக்கப்பட்ட அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது டீஸ்டா செதல்வாட்டுக்கு பெரும் நெருக்கடியாக கருதப்படுகிறது.