நீங்கள் ஒப்புக்கொள்ளவேயில்லை.. இதுதான் பெரிய ஆபத்து.. மத்திய அரசை விளாசிய மன்மோகன் சிங்
டெல்லி: நரேந்திர மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார், முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான, மன்மோகன் சிங்.
பொருளாதார மந்தநிலை இருப்பதை அரசு ஒப்புக் கொள்ளகூட முன்வரவில்லை என்றும், நாட்டின் சவால்களைச் சமாளிக்க சீர்திருத்தங்களை புதிதாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார்.
திட்டக் கமிஷன், முன்னாள், துணைத் தலைவரும், பொருளாதார வல்லுநருமான, மாண்டெக் சிங் அலுவாலியா எழுதிய, "Backstage" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
பதில் தேவை
இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட நிலையில், மன்மோகன்சிங் பேசியதாவது: இன்று நம்மிடம் ஒரு அரசு உள்ளது. இது மந்தநிலை என்ற நிலை இருப்பதையே ஒப்புக் கொள்ளவில்லை. இது நமது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் அடையாளம் காணவில்லை எனில், சரியான நடவடிக்கைகளை எடுக்க நம்பகமான பதில்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. அதுதான், உண்மையான ஆபத்து.
முடியாது
எனவே, மாண்டெக் சிங், தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, 2024-25வாக்கில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் வாய்ப்பு கிடையாது. விவசாயிகளின் வருமானம் மூன்று ஆண்டு காலத்தில் இரட்டிப்பாகும் என்று அரசு கூறுகிறது. அது நடக்கும் என எதிர்பார்க்க எந்த காரணமும் நம்மிடம் இல்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 8 சதவீதமாக உயர்த்த முடியும்.
நிதிப் பற்றாக்குறை
இப்படி பொருளாதாரத்தை உயர்த்த நிதிக் கொள்கையின் பங்கு மற்றும் துணிச்சலான வரி சீர்திருத்தங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். மான்டெக் சொல்வது போல் நீங்கள் உண்மையான நிதி வரை படத்தைப் பார்த்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் உண்மையான நிதிப் பற்றாக்குறை 9 சதவிகிதம் அதிகமாக உள்ளது, மேலும் இது ஒரு மாறும் பொருளாதாரம், வளர்ந்து வரும் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இப்படியாக இருப்பது நல்லதல்ல.
அரசு முதலீடு
பொருளாதாரத்தை வேகம்பிடிக்க வைக்க, மத்திய அரசு, தனது செலவீனங்களை உயர்த்த வேண்டும். உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டும், மேலும் இந்தத் துறைகள் அனைத்துக்கும் கடந்த காலங்களில் பெற்றதை விட அதிக கவனம் தேவை. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத, வீழ்ச்சியாக, 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் பொருளாதாரம் 5 சதவீதமும், இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமும் வளர்ச்சியடைந்தது. இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.