நெருக்கடியில் பாக்.: பலூச் மொழியில் வானொலி நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி!!
டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண மக்களுக்காக பலூச் மொழியில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய ஆல் இந்தியா ரேடியோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாண மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தனிநாடு கோரி போராடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.
பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல் பிரதமர் மோடியும் சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இது தனிநாடு கோரும் பலுசிஸ்தான் மக்களுக்கு உத்வேகத்தை அளித்தது. வெளிநாடுகளில் வாழும் பலுசிஸ்தானியர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பலூச் மக்களுக்கு இந்தியாவின் ஆதரவை முழுவதுமாக தெரிவிக்கும் வகையில், ஆல் இந்தியா ரேடியோவில் பலூச் மொழியில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் பிடியில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் பலுசிஸ்தானையும் விடுவிப்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.