வாங்க, எல்லாரும் சேர்ந்து யோகா பண்ணலாம்... சோனியா, ராகுல், கெஜ்ரிவாலுக்கு மோடி அரசு அழைப்பு!
டெல்லி: உலக யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந்தேதி உலக யோகா தினமாக அனுசரிக்கப்படும் என ஐ.நா. சபை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. அதன்படி வருகிற 21ம் தேதி முதலாவது உலக யோகா தினம் அனுசரிக்கப் பட உள்ளது.
இதனை விமர்சையாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் குழந்தைகள், போலீசார், ராணுவ வீரர்கள் என சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
இதேபோல், அனைத்து அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.