ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை தடாலடி முடிவு
டெல்லி: ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் (Single-Brand Retail)100சதவீத அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சிறு வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
*கட்டுமானத்தொழிலில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி.
*ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
*ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
திறந்த வெளி பொருளாதாரம்
சுவிட்சர்லாந்தின், தாவோஸில் நடைபெற உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க செல்ல உள்ள நிலையில், இதுபோன்ற ஒரு திறந்த வெளி பொருளாதாரத்திற்கு இந்திய சந்தையை திறந்துவிட்டுள்ளது அரசு.
முன்பு வேறு விதிமுறை
இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. ஆனால் இதுவரை 49 சதவீதம் மட்டுமே ஒற்றை பிராண்ட் சில்லரை வணிகத்திற்கு அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கியிருந்ததையும், அதற்கு மேல் எனில் அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்ததையும் சுட்டிக் காண்பிக்கும் உள்நாட்டு வணிகர்கள், 100 சதவீத அன்னிய முதலீட்டை தானியங்கி முறையிலேயே (automatic route) பெற முடியும் என அமைச்சரவை இன்று அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
கண்டனம்
அனைத்திந்திய வணிகர் பேரவை (CAIT) வெளியிட்ட அறிக்கையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி என்பது, பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் இந்திய மார்க்கெட்டை ஆக்கிரமிக்கவே உதவும். பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதை மீறிவிட்டது என கண்டித்துள்ளது.
மற்றொரு பார்வை
அதேநேரம், மோன்டே கார்லோ பேஷன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் சந்தீப் ஜெயின் கூறுகையில், "அமைச்சரவையின் இந்த முடிவால் உள்நாட்டு வணிகர்கள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள். அன்னிய முதலீடு எளிதாக வருவதற்குதான் வகை செய்யப்பட்டுள்ளது. மற்றபடி ஏற்கனவே இந்த அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டுதான் உள்ளன" என்றார்.