பிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கினார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் பிரதமர் மோடி லஞ்சம் வாங்கியதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கினார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் மேசானா பகுதியில் நடந்த காங்கிரஸ் பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அங்கு ராகுல் காந்தி பேசியதாவது: சஹாரா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது அந்த நிறுவனத்தின் முக்கிய டைரிகள் கைப்பற்றப்பட்டன.
அதில் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 அக்டோபர் முதல் 2014 பிப்ரவரி வரை கிட்டதட்ட 9 முறை அவருக்கு பணம் வழங்கியிருக்கின்றனர். இதேபோல பிர்லா நிறுவனங்களில் இருந்தும் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ரூ.12 கோடி பணம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக விரைவில் விசாரணை துவங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தை மறைக்க மக்களை திசை திருப்பும் முயற்சியில் ராகுல் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.