ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் உத்தம பட்ஜெட்- மோடி
அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அனைவரையும் திருப்தி படுத்தும் என்றும் ஏழைகளுக்கான பட்ஜெட் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: 2017 - 18ஆம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பற்றி கருத்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் என்றார்.
பட்ஜெட் பற்றி கருத்து கூறிய பிரதமர் மோடி, 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமானவரி விகித குறைப்பு நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.
ஏழைகள், வேளாண்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைப்பது விரைவில் சாத்தியமாகும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் நிதி திரட்டுவதில் ஊழலை தடுக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, சாலை கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இது அனைவரையும் திருப்தி படுத்தும் பட்ஜெட் என்று கூறிய மோடி, தனி நபர் வருமான வரி அளவு குறைக்கப்பட்டுள்ளது, நடுத்தர வர்க்கத்தினருக்கு நேரடி பலன் கிடைக்கும் என்று கூறினார்.
நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் மோடி.
வேளாண்மை, மீன்வளம், தூய்மையான இந்தியா உள்ளிட்ட இலக்குகளை கொண்டுள்ளது பட்ஜெட் தாக்கல். இளைஞர்கள், பெண்கள், முதியோர் நலனுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறினார் மோடி.
இது ஊழலை ஒழிக்கும் உத்தம பட்ஜெட் என்று கூறிய மோடி, கறுப்பு பணத்திற்கு எதிராக கடைசி வரை போராடுவேன் என்றார். இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் என்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம் என்றும் கூறினார்.