மோடி பிரதமரானாலும் இந்திய-பாக். நட்பு சாத்தியம் இல்லை: லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்
டெல்லி: மோடி பிரதமர் ஆனாலும், இந்திய-பாகிஸ்தான் நட்பு சாத்தியம் இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் ஜமாத்-உட்-தாவா இயக்க தலைவரும், முன்னாள் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்.
26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சயீத். இவரது இன்னொரு முகம்தான் லஷ்கர் இ தொய்பாவாகும்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், புதிய பிரதமராகப் போகும் மோடியை கொடுங்கோலன் என விமர்சித்துள்ளார் ஹபீஸ்.
அதேபோல், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு குறித்து கூறுகையில், ‘இந்தியாவுடன் முன்னேற்றமான உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு இனி இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு மற்றும் மதசார்பு போன்ற வாதங்களால் மோடி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார். மோடி ஒரு கொங்கோலன், தற்போது ஆட்சிக்கும் வந்துள்ளார், இருப்பினும் உங்களால் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே எந்த நட்புறவையும் முன்னெடுத்து செல்ல முடியாது.
மோடி ஆட்சிக்கு வந்துவிட்டார். இப்போது பாகிஸ்தானுடனான நட்பு என்ற மாயை சிதறிட கடவுள் விரும்புகிறார். உண்மையில் நட்புறவு என்ற மாயை ஏற்கனவே நொறுங்கிவிட்டது" என்று ஹபீஸ் கூறியுள்ளார்.