காஷ்மீர் பிரியும்.. ஃபரூக் அப்துல்லா பேச்சுக்கு மோடி கடும் கண்டனம்
அகமதாபாத்: நாடு மதவாதிகளின் கைக்குப் போனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்காது என்று மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா பேசியதற்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நரேந்திர மோடி அளித்துள்ள பதில்:
எங்கள் ரத்தத்திலேயே மதச்சார்பின்மை என்பதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஃபரூக் அப்துல்லாவின் தந்தை ஆட்சி செய்த காலத்தில்தான் காஷ்மீரில் மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் தொடுக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டது. பிரச்சனையும் சர்வதேசமயமாக்கப்பட்டது.
அங்கிருந்த பண்டிட்டுக்கள், ஹிந்துக்கள் என்பதால் மதத்தின் பெயரால் ஜம்மு காஷ்மீரை விட்டு துரத்தியடிக்கப்பட்டனர். அப்படி ஹிந்துக்களை வெளியேற்றியதும் ஃபரூக் அப்துல்லவின் ஆட்சிதான்.
எங்களுக்கு வாக்களித்தால் ஆற்றிலோ கடலிலோ மூழ்கவேண்டியதுதான் என்று பேசுவோர் தங்களது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
இவ்வாறு மோடி பதிலளித்துள்ளார்.
ஒமர் அப்துல்லா கண்டனம்
இதனிடையே மோடியின் இந்த பேச்சுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் தாத்தா சேக் அப்துல்லா முஸ்லிம் வாழும் பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவதை விரும்பவில்லை என்பதை நரேந்திர மோடி மறந்துவிட்டார்
மதச்சார்பின்மை குறித்து காஷ்மீரத்துக்கும் காஷ்மீரிகளுக்கும் நரேந்திர மோடி பாட்ம எடுக்க தேவையில்லை. 1947ஆம் ஆண்டு ஹிந்து- முஸ்லிம் வன்முறை வெடித்த போது சகிப்புத் தன்மையின் அடையாளமாக இருந்தது காஷ்மீர் மட்டுமே என்றார்.