திரிபுரா முதல்வர் பதவியேற்பு விழா: வணக்கம் சொன்ன அத்வானியை கண்டுக்காமல் அவமானப்படுத்திய பிரதமர் மோடி
திரிபுராவில் முதல்வர் பதவியேற்பு விழாவில் வணக்கம் சொன்ன அத்வானியை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி அவமானப்படுத்தினார்.
Recommended Video
அகர்தலா: திரிபுராவில் இன்று முதல்வர் பிப்லாப் தேவ் பதவியேற்பு விழாவில் கும்பிட்டு வணக்கம் சொன்ன அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் புறக்கணித்தது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அங்கு முதல்வராக பிப்லாப் தேவ் தேர்வு செய்யப்பட்டார்.
அகர்தலாவில் பதவியேற்பு விழா
அகர்தலாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் பிப்லாப் தேவ் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வணக்கம் செலுத்துதல்
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது அங்கிருந்த முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொருவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.
அத்வானிக்கு அவமானம்
இந்த விழாவில் அத்வானி வணக்கம் சொன்னபோது அவரை முகம் கொடுத்தும் பாராக்காமல் பதிலுக்கு வணக்கமும் கூறாமல் அவருக்கு பக்கத்தில் இருந்த முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் கைகளை பற்றி கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் மோடி. தன்னிடம் பேசுவார் என்று அத்வானி மோடியையே பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் அடுத்த நபருக்கு கைகுலுக்க சென்றுவிட்டார்.
|
அவமானம்
அத்வானிக்கு வணக்கம் சொல்லாமல் மோடி அவமதித்த காட்சிகளும், இதனால் அத்வானியின் முகம் வாடிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்ற விழாக்களில் மூத்த தலைவரான அத்வானி போன்றோர் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்று டுவிட்டரில் கருத்துகள் குவிகின்றன. மேலும் மூத்த தலைவர்களுக்கு இதுதான் மரியாதையா என்று கேட்டும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வலம் வருகின்றன.