11 ஆயிரம் கோடி செலவு.. 16 வழி சாலை.. சூப்பர் தொழில்நுட்பம்.. டெல்லியின் புதிய புறவழிச்சாலை
டெல்லி: டெல்லியின் புறநகர் வழியாக செல்லும் 16 வழி தேசிய நெடுஞ்சாலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.
இந்த சாலை மொத்தம் 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது. வல்லரசு நாடுகளின் தரத்தில் இந்த சாலை மிகவும் புதிய தொழில்நுட்பத்துடன் திறக்கப்பட்டுள்ளது. இதை கட்ட மொத்தம் 3 வருடங்கள் ஆகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி இந்த சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஹரியானாவில் பால்வால் நகரத்தில் இருந்து குன்டிலி நகரத்திற்கு ஒரு வழியும் நொய்டா காசிபாத் வழியாக இன்னொரு வழியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
மோடி
135 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டு இருக்கும் இந்த புறவழிச்சாலை நாளையில் இருந்து பயன்பாட்டிற்கு வரும். நாளை பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் சென்று இந்த சாலையை திறந்து வைக்கிறார். மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்த சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
அனுமதி இல்லை
இந்த சாலையின் தொடக்கத்தில் எடை சோதிக்கும் சென்ஸார் கருவி இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 100 வாகனம் சோதிக்கப்படும். இதில் வாகனத்தின் எடை அதிகமாக இருந்தால், அந்த வாகனம் சாலைக்குள் அனுமதிக்கப்படாது. அந்த வாகனம் தற்காலிகமாக நிறுத்துமிடத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
மரம்
இந்த சாலையில் மொத்தம் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு மூலம் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டு, இந்த மரக்கன்று வளர்க்கப்படும். சாலை முழுக்க பாதுகாப்பிற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சோலார் மின்விளக்குகள் மூலம் சாலை ஒளிரூட்டப்பட்டுள்ளது.
டெல்லியின் மாசு பிரச்சனை
ஆனால் இந்த சாலையில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இதன் சுங்க கட்டணம் மற்ற சாலைகளின் கட்டணத்தை விட 25 சதவிகிதம் அதிகம். ஆனால் நாம் செல்லும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் காட்டினால் போதும். இதனால் டெல்லிக்குள் 50 ஆயிரம் வாகனங்கள் செல்வது குறையும். இதனால் டெல்லியின் மாசு பெரிய அளவில் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.