பக்கோடா விற்பதை வேலை வாய்ப்பு என்கிறார் மோடி.. டீக்கடைக்காரரின் பேச்சு இது.. ஹர்திக் பட்டேல் தாக்கு
பிரதமர் மோடியின் வேலைவாய்ப்பு குறித்த பேச்சுக்கு ஹர்திக் பட்டேல் பதில் அளித்து இருக்கிறார்.
அஹமதாபாத்: குஜராத்தில் அரசியல் மாற்றங்களை நிர்ணயிப்பது பாஜக மட்டுமே என்ற நிலைதான் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை இருந்து வந்தது. ஆனால் தற்போது அங்கு பல இளம் அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள்.
அதில் முக்கியமான நபர் ஹர்திக் பட்டேல். குஜராத்தில் பட்டேல் இனமக்களின் இளம் தலைவராக இவர் பார்க்கப்படுகிறார். மோடிக்கு எதிராக இவர் அடிக்கடி கருத்து கூறி வருகிறார்.
இந்த நிலையியில் தற்போது மோடியை இவர் டீக்கடைக்காரர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து மோடி ஒன்றும் தெரியாமல் பேசுகிறார் என்று கூறியுள்ளார்.
டீக்கடைக்காரர் பிரச்சாரம்
மோடியை பொதுவாக எதிர்க்கட்சிகள் டீக்கடைக்காரர் என்று கூறி சில சமயங்களில் தாக்குவது உண்டு. அதேபோல் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கூட அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிரச்சாரம் செய்வார்கள். சென்ற நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி குஜராத் சட்டமன்ற தேர்தல் வரை இது முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டது.
மோடி
மோடி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசினார். அப்போது ''இந்தியாவில் ஒரு இளைஞன் பக்கோடா விற்று வீட்டிற்கு 200 ரூபாய் கொண்டு சென்றால் அவன் வேலை வாய்ப்பு உள்ளவன் என்றுதானே அர்த்தம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஹர்திக் பதில்
தற்போது இதற்கு ஹர்திக் பட்டேல் பதில் அளித்துள்ளார். அதில் ''டீக்கடைக்காரர் இப்படித்தான் பேசுவார். அவர்கள்தான் பக்கோடா கடை வைத்தால் வேலைவாய்ப்பு உருவாகிவிட்டதாக நினைப்பார்கள். அவர் கண்டிப்பாக பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாமல் இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரச்சனை
தற்போது இந்த விஷயம் பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது. ஏற்கனவே சில காங்கிரஸ் தலைவர்கள் இப்படி பேசி கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது இந்த உரையாடல் காரணமாக ஹர்திக் பட்டேலும் நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளார்.