எம்பி அகமது இறந்த அன்றே பட்ஜெட் தாக்கல்.. இந்தியாவின் ட்ரம்ப் மோடி.. லாலு விளாசல்
இன்று அதிகாலை எம்பி அகமது மரணம் அடைந்த நாளில், பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அரசை லாலு பிரசாத் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவின் ட்ரம்ப் மோடி என்றும் அவர் பிரதமரை தாக்கியுள்ளார்.
பாட்னா: மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு ஒன்றும் இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எம்பி அகமது மரணமடைந்த இன்றே நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள மோடியை இந்தியாவின் ட்ரம்ப் என்றும் விளாசியுள்ளார் லாலு.
எம்பி அகமது நாடாளுமன்றத்திலேயே மயங்கி விழுந்து இன்று அதிகாலை இறந்துள்ளார். அவரது மறைவிற்கு மரியாதை செய்யும் வகையில் நாடாளுமன்ற அவைக் கூட்டத்தை ஒத்தி வைக்காமல் பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய அரசு தவறாக நடந்து கொண்டுள்ளது என்று லாலு கூறியுள்ளார்.
மேலும், மறைந்த எம்பி இ.அகமது மூத்த தலைவர் என்றும் அவரது மறைவிற்கு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் லாலு, இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மத்திய அரசின் மனிததன்மையற்ற செயலையும் உணர்வையுமே காட்டுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து லாலு கூறும் போது, வெற்று வாக்குறுதிகளைக் கொண்ட ஏழை எளிய மக்களுக்காக எந்த திட்டமும் இல்லாத பட்ஜெட் இது என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி இந்தியாவின் ட்ரம்ப் என்றும், இரண்டு பேருமே பிரச்சனைகளை உருவாக்குபவர்கள் என்றும் அவர் கூறினார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியாவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பட்ஜெட்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் எவ்வளவு கருப்புப் பணம் வெளி கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறிவித்திருக்க வேண்டும் என்றும் லாலு தெரிவித்தார்.