பிரதமர் மோடி ஒரு விளம்பர ப்ரியர்..!! மமதாவின் கொல்கத்தா மாநாட்டில் முழங்கிய நாயுடு
Recommended Video
கொல்கத்தா: நால்லாட்சி தருவதாக கூறிய பாஜக அரசு, மக்களை முழுவதுமாக ஏமாற்றி விட்டதாகவும், செயல்பாடுகளில் முக்கியத்துவம் காட்டாமல் இருக்கும் மோடி ஒரு விளம்பரப்ரியர் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமமான ஒற்றுமை இந்தியா மாநாடு என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. கூட்டம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்றது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களை தவிர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், தேவகவுடா ஆகியோர் பங்கேற்றனர். ஜிக்னேஷ் மேவானி, காஷ்மீர் தலைவர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரபேல் விமான ஊழல்
எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நாடு முழுவதும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பாஜக மிகப்பெரும் ஊழல் செய்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் நமக்குத் தேவை. பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளரவில்லை, வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளது. சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை.
விளைவை சந்திக்க வேண்டும்
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தால் பாஜக வரும் தேர்தலில் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். எதிர்கட்சிகளை மிரட்ட சிபிஐ போலீசை மத்திய பாஜக அரசு ஏவிவிடுகிறது.
தோல்வி உறுதி
மோடி ஆட்சிக்கு தோல்வி தொடங்கிவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற, பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். ஆந்திர மாநிலம் அமராவதியிலும் இதே போன்று ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்.
அழிவுப்பாதையில் விவசாயம்
நாட்டில் விவசாயம் முழுவதையும் பாஜக சீரழித்துவிட்டது. முன்னேற்றம் என்பதை விட.. அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்வதே பாஜகவின் வேலையாக உள்ளது. செயல்பாடுகளில் முக்கியத்துவம் காட்டாமல் இருக்கும் மோடி ஒரு விளம்பரப்ரியர்.
வாக்குச்சீட்டு முறை தேவை
சாதி, மொழி, இனம் என பலவகைகளில் மக்களை துண்டாட பாஜக முயன்று வருகிறது. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு தேவையில்லை. பெரும்பாலான வெளிநாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறைதான் பயன்படுத்தப்படுகிறது. நமக்கு இப்போது இருக்கும் ஒரே குறிக்கோள்.. நாட்டை பாதுகாப்பதுதான். அதுவும் பாஜகவிடம் இருந்து காக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.