பிரதமாக இருக்கும் தகுதியை மோடி இழந்து வருகிறார் : சித்தராமையா தாக்கு
நாட்டின் பிரதமராக இருக்கும் தகுதியை மோடி இழந்து வருகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
பெங்களூரு : நாட்டின் பிரதமாக இருக்கும் தகுதியை சமீபகாலமாக பிரதமர் மோடி இழந்து வருகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்காக இதுவரை இரண்டு முறை பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி.
தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும், முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி குறித்தும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போதைய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள மோடி, காங்கிரஸ் அரசை கமிஷன் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய சித்தராமையாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாடு முழுவதும் பாஜக ஏற்படுத்தி வரும் பிரச்னைகள் குறித்து பிரதமர் வாய் திறப்பதே இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய பொறுப்பற்ற கருத்துகளை மட்டுமே அவர் பேசுகிறார்.
சமீபகாலங்களில் நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய தகுதியையே அவர் இழந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக மனக்கோட்டை கட்டி வருகிறது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.