மோடி ஜனவரி மாதம் சபரிமலை வர வாய்ப்பு: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல்
திருவனந்தபுரம்: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி சபரிமலை வர வாய்ப்பிருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ளது பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில். இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். எனவே, பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, சபரிமலையை தேசிய புனித ஸ்தலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் கேரள முதல்வர் உம்மன்சாண்டி.
அந்த சந்திப்பின் போது, சபரிமலைக்கு வருகை தரும்படியும் மோடிக்கு உம்மன்சாண்டி அழைப்பு விடுத்தார். மோடியும் அந்த கோரிக்கையை ஏற்று கொண்டார். எனவே, மோடி சபரிமலைக்கு வருவார் என்பது மட்டும் உறுதி செய்யப் பட்ட நிலையில், அவர் எப்போது வருவார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் மோடி வருகிற ஜனவரி மாதம் சபரிமலைக்கு வருகை தர வாய்ப்பு உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோவிந்தன் நாயர் கூறியுள்ளார். இது தொடர்பாக சபரி மலையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
ஜனவரி மாதம் கேரளாவில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி கேரளா வருகிறார். அப்போது அவர் சபரிமலைக்கு வர வாய்ப்பு உள்ளது.
சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவித்தால் சர்வதேச அளவில் சபரிமலை பிரசித்தி பெறும். சபரிமலை வளர்ச்சி பணிக்கு 500 ஏக்கர் நிலம் தேவை. அந்த நிலத்தை மத்திய அரசு தந்தால் அதற்கு பதில் தேவசம் போர்டின் வசம் உள்ள இடத்தை வனத்துறையிடம் ஒப்படைப்போம்.
சபரிமலையில் ‘ரோப் வே' அமைக்கும் திட்டம் உள்ளது. ஒரு வருடத்திற்குள் இந்த பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.