நேபாளத்தின் முக்திநாத் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன இடத்தில் டிரம்ஸ் அடித்து மகிழ்ந்த மோடி!
நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பாரம்பரிய ட்ரம்ஸை அடித்து மகிழ்ந்தார்.
காத்மாண்டு: நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பாரம்பரிய ட்ரம்ஸை அடித்து மகிழ்ந்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று காலை நேபாளம் சென்றார். இந்த பயணத்தில் ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.
நேபாளத்தில் மோடி
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜனக்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி இடையிலான பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
முக்திநாத் கோவிலில் மோடி
இரண்டாம் நாளான இன்று காலையிலேயே முக்திநாத் கோயிலுக்கு சென்ற மோடி ஸ்வாமிக்கு ஆதராதனை காட்டி வழிபட்டார். அங்குள்ள மக்கள் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பாக வரவேற்றனர்.
|
ட்ரம்ஸ் அடித்து மகிழ்ந்த மோடி
கோயிலில் திரண்டிருந்த மக்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். நேபாள மக்கள் கொடுத்த அன்பளிப்பு பொருட்களையும் அவர் பெற்று கொண்டார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய ட்ரம்ஸையும் அவர் அடித்து மகிழ்ந்தார்.
இன்று திரும்புகிறார்
நண்பகலில் நேபாள அரசியல் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி காத்மண்டு மேயர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் இன்று மாலையே பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.