அதெல்லாம் பாஜக சார்பில் போட்டியிட முடியாது.. மோடி 'ஆஃபரை' நிராகரித்தார் கங்குலி!
டெல்லி: பாஜக சார்பில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறும், போட்டியிட்டு வென்றால் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு நரேந்திர மோடி ஆசை காட்டி அழைத்திருந்தார். ஆனால் அந்த அழைப்பை கங்குலி திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.
அப்படி ஒரு திட்டமோ, எண்ணமோ என்னிடம் இல்லை. நான் மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார் கங்குலி.
முன்னதாக மோடியே நேரடியாக கங்குலியிடம் இதுகுறித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு அமைச்சர் பதவி
கங்குலி பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றால், அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று மோடி உறுதியளித்தாராம்.
திட்டவட்ட மறுப்பு
ஆனால் தான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டதாக கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்க அவர் அளித்த பேட்டியில், உண்மைதான், எனக்கு சீட் தர பாஜக தரப்பில் அணுகினர்.
மறுத்து விட்டேன்
ஆனால் அதை நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். நான் தேர்தலில் போட்டியிடவில்லை, போட்டியிடும் எண்ணமும் இல்லை என்றார் கங்குலி.
சச்சின் மாதிரி எம்.பி. ஆவீர்களா
சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா எம்.பி. ஆக உள்ளது போல நீங்களும் ஆவீர்களா என்ற கேள்விக்கு இல்லை, எனது களம் கிரிக்கெட் மைதானம் மட்டுமே, நாடாளுமன்றம் அல்ல என்றார் கங்குலி.
வருண் காந்தியும் கூப்பிட்டாரமே
கங்குலியிடம் வருண் காந்தியும் கூட இதுதொடர்பாக அணுகியதாக கூறப்படுகிறது. அவர்தான் மோடி சார்பில் முதலில் பேசினாராம்.