நேராக மோத வலிமை இல்லாமல் தீவிரவாதிகள் மூலம் மறைமுகமாக மோதும் பாக்.: மோடி தாக்கு
ஜம்மு: நேராக மோதாமல் தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் மறைமுக போர் நடத்துவதை பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் மற்றும் சியாச்சின், லடாக் ஆகிய பகுதிகளுக்கு இன்று வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் இன்று காலை கார்கில் வந்தார். கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பின் அந்த பகுதிக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி தான்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாம்பூர் நகரில் திங்கிட்கிழமை இரவு எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் பதாமி பாக் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மோடி இன்று ஜம்மு காஷ்மீர் வந்துள்ள நிலையில் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடக்கும் செயல்களும் அவ்வப்போது நடக்கிறது. இந்தியா அத்துமீறியதாக பாகிஸ்தானும், பாகிஸ்தான் அத்துமீறியதாக நம் வீரர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மோடி லடாக் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். ஆனால் அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு ஜம்மு காஷ்மீர் வந்துள்ளது இது இரண்டாவது முறை ஆகும். அவர் லே பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் சுடாக் நீர் மின் நிலைய திட்டம், நிமூ பாஸ்கா நீர் மின் நிலைய திட்டம் மற்றும் லே-ஸ்ரீநகர் மின்தட திட்டம் ஆகியவற்றை துவங்கி வைத்தார்.
கூட்டத்தில் பேசிய மோடி கூறுகையில், நம் அண்டை நாடு நம்முடன் நேருக்கு நேர் மோதும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் தான் தீவிரவாதிகள் மூலம் மறைமுகப் போர் நடத்துகிறது. இந்த மறைமுக போரில் தான் நம் வீரர்கள் அதிக அளவில் பலியாகிறார்கள் என்றார்.