ரஷ்யா புறப்பட்டார் மோடி.. 3 முக்கிய ஒப்பந்தங்களில் நாளை இந்தியா- ரஷ்யா கையெழுத்து!
டெல்லி: பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் புடினுடன் இரு தரப்பு பிரச்சினைகள் மற்றும் பல்வேறு முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான 16வது வருடாந்திர சந்திப்பையொட்டி பிரதமர் மோடி இப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி செல்வது 2வது முறையாகும்.
பிரதமர் மோடியும், அதிபர் புடினும் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதன் பின்னர் நாளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. அணு சக்தி, ராணுவம் ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் போடப்படவுள்ளன. மொத்தம் 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன இரு தரப்பும்.
ஜெய்சங்கர்
பிரதமரின் ரஷ்ய பயணம் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஷ்யாவுடன் பலவேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதற்கான இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார உறவு மேம்படும்
இரு நாடுகளிடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆண்டு வர்த்தகத்தை நடப்பு 10 பில்லியன் டாலரில் இருந்து 10 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர் அளவுக்கு, தோராயமாக ரூ.67,000 கோடியிலிருந்து ரூ.2,01,000 கோடியாக அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.
இரவு விருந்து
இன்று மோடிக்கு புடின் இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கிறார். மோடி, புடின் இடையிலான பேச்சுவார்த்தையின்போது பல சர்வதேச வி்வகாரங்கள் இடம் பெறவுள்ளன.
தொழிலதிபர்களுடன் சந்திப்பு
நாளை கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய மற்றும் இந்தியத் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். புடினும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார். அதேபோல ரஷ்யா வாழ் இந்தியர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசவுள்ளார்.
25ம் தேதி ஆப்கானிஸ்தான்
ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி, 25ம் தேதி ஆப்கானிஸ்தானுக்குச் செல்கிறார். அது ஒரு நாள் பயணமாகும். அதன் பின்னர் அவர் தாயகம் திரும்புவார்.
தலிபான் - ஐஎஸ்ஐஎஸ்
புடினுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது, தீவிரவாதம் குறித்து முக்கியமாகப் பேசவுள்ளார் மோடி. குறிப்பாக தலிபான்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த பேச்சுக்கள் முக்கியமாக இடம் பெறவுள்ளது.
நேதாஜி குறித்து
மேலும் முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த முக்கிய ஆவணங்கள் தொடர்பாகவும் புடினுடன் பேசவுள்ளார் மோடி. நேதாஜி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தபோது சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி மரணமடைந்தார் என்று வலுவாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான்
மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் மோடி, புடின் பேசவுள்ளனர். ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பிரச்சினை ஒன்றுதான். எனவே இதில் கூட்டு நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது.
சிரியப் போர்
ரஷ்யா தற்போது ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு எதிராக சிரியாவில் போரில் குதித்துள்ளது. அதேசமயம், இந்தியா இந்தப் போரில் கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்திலும் அதிக அக்கறை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பெரும் பிரச்சினைகள்
அதேசமயம், தலிபான்களும் சரி, ஐஎஸ் தீவிரவாதிகளும் சரி இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் பெரும் மிரட்டல்களாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை தெற்காசிய கண்டத்தில் அமைதி நி்லவ வேண்டும் என்று விரும்புகிறது. இதற்கு தலிபான்களும், ஐஎஸ் தீவிரவாதிகளும் வீழ்த்தப்பட வேண்டியது அவசியமாகும். ரஷ்யாவுக்கும் இரு எதிரிகளும் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைதான். எனவே இதுகுறித்து இரு தரப்பும் முக்கியமாக விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.
நேதாஜி ரகசியம்
மோடியின் ரஷ்ய பயணத்தின்போது நேதாஜி குறித்த முக்கிய ஆவணங்கள் குறித்தும் பேசவுள்ளார். வரும் ஜனவரி மாதம் நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என்று நேதாஜி குடும்பத்தினருக்கு மோடி உறுதியளித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
2வது முறையாக
ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி செல்வது இது இந்த ஆண்டில் 2வது முறையாகும். இதற்கு முன்பு ஜூலை 8-10ம் தேதி மாஸ்கோவில் நடந் பிரிக்ஸ் மாநாட்டுக்காக ரஷ்யா சென்றிருந்தார் மோடி. பிரதமராக அவரது முதல் ரஷ்ய பயணமாகும் அது.
3 முக்கிய ஒப்பந்தங்கள்
இந்தியா - ரஷ்யா மாநாட்டின்போது பாதுகாப்புத்துறையி்ல 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. ரஷ்யாவிடமிருந்து 2வது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை லீசுக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான முக்கிய ஒப்பந்தமும் நாளை கையெழுத்தாகவுள்ளது. ஏற்கனவே கே 152 (ஐஎன்எஸ் சக்ரா) என்ற நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது நினைவிருக்கலாம்.
200 காமோவ் ஹெலிகாப்டர்கள்
இதேபோல 600 மில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து 200 காமோவ் ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்கவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.