குஜராத்தில் மோடியின் இறுதி ஆயுதம் கண்ணீர் : ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ்
மோடியிடம் இருக்கும் கடைசி ஆயுதம் கண்ணீர் தான் என்று குஜராத் ஓ.பி.சி கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்
Recommended Video
அகமதாபாத் : குஜராத் தேர்தலில் பா.ஜ.க.,வை வெற்றி பெற வைக்க இனி மோடியிடம் கைவசம் இருப்பது கண்ணீர் தான் என்று காங்கிரஸிற்கு ஆதரவளித்து வரும் ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்புத் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்து உள்ளார்.
குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க ஐந்து கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை மட்டுமே அறிவித்து உள்ளது. பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.,வை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. ஆளும் பா.ஜ.க.,வின் மீது அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவர்களைத் திரட்டி பா.ஜ.க.,வை எதிர்க்க காங்கிரஸ் வியூகம் வகுத்து இருக்கிறது.
ஆதரவளித்த பட்டேல்கள்
இதனடிப்படையில் ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டேல் இன போராட்டக்குழுவிடம் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி அளித்து ஆதரவைப் பெற்று இருக்கிறது காங்கிரஸ். அதுபோல தலித் இன மக்களுக்காகப் போராடி வரும் ஜிக்னேஷ் மேவானியுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவரான அல்பேஷ் தாகூரும் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.
அம்புகள் எய்ந்த பா.ஜ.க
இந்நிலையில், ரதன்பூரில் ஒரு கூட்டத்தில் பேசிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர், நாளுக்கு நாள் பா.ஜ.க செல்வாக்கு தொய்வடைந்து வருவது தெரிகிறது. எங்களின் மீது அனைத்து விதமான அம்புகளையும் எய்து எங்களை அவர்கள் வழிக்குவரும்படி பணித்தார்கள். ஆனால், நானோ, ஹர்திக்கோ, ஜிக்னேஷோ அவர்களுக்கு ஆதரவளிப்பதாக இல்லை என்றார்.
குஜராத் பிரச்னைகள்
மேலும், இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் ஹர்திக் பட்டேலுக்கு எதிரான கொள்கையில் நான் போராடி வருகிறேன். ஆனால், இது எந்தவிதத்திலும் வெற்றியை பாதிக்காது. விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு என அனைத்து துறையும் தற்போதைய அரசால் மோசமான நிலையை அடைந்து இருக்கின்றன. சுமார் 50 லட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இதை எல்லாம் மாற்றுவதற்கு நாம் இப்போது காங்கிரஸோடு கைகோர்க்க வேண்டி இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.
மோடியின் இறுதி ஆயுதம்
தற்போது பா.ஜ.க., தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறது. தற்போது அவர்கள் தலைவர் மோடியிடம் இருக்கும் கடைசி ஆயுதம் கண்ணீர் தான். விரைவில் குஜராத் மக்களிடம் வந்து தன்னுடைய கண்ணீரை சிந்தப்போகிறார். எனக்காக ஓட்டு போடமாட்டீர்களா? என்று கேட்கப்போகிறார் என்று அல்பேஷ் குறிப்பிட்டார். அப்படி வந்தாலும் உங்கள் பெருமைக்காக எங்களால் இன்னொரு முறை சாகமுடியாது என்று கூற மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.