மோடியின் பி.ஏ.பட்டம் உண்மையானது தான்: டெல்லி பல்கலைக்கழகம் தகவல்
டெல்லி: பாஜக தலைவர்களால் வெளியிடப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ. பட்டப் படிப்புச் சான்றிதழ் உண்மையானதுதான் என்று டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் தருண் தாஸ் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடிக்கு டெல்லி பல்கலைக்கழகம் அளித்த பி.ஏ. பட்டம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் அளித்த எம்.ஏ. பட்டத்தை டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் பகிரங்கமாக வெளியிட்டனர்.
ஆனால் இந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அஸூதோஷ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜனதா தலைவர்கள் வெளியிட்ட பி.ஏ. மற்றும் எம்.ஏ. டிகிரி சான்றிதழ்களில் காணப்படும் பெயர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.
மோடியின் பி.ஏ. டிகிரி மதிப்பெண் பட்டியலில் 1977 என உள்ளது. ஆனால் பட்டச் சான்றிதழ், படிப்பை 1978-ம் ஆண்டு முடித்ததாக காட்டுகிறது. இது மிகப்பெரிய முரண்பாடு என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தருண் தாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மோடியின் பி.ஏ. மதிப்பெண் சான்றிதழில், அவரது பெயர் "நரேந்திர குமார் தாமோதர்தாஸ் மோடி' என்றும், எம்.ஏ. சான்றிதழில் "நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்றும் உள்ளது.
மாணவர்களின் இடைப்பெயர்கள் விடுபடுவது வழக்கமாக நடக்கும் தவறுதான். மாணவர்கள் சுட்டிக் காட்டும்போது அந்தத் தவறுகளை திருத்தியிருக்கிறோம். அவர் 1978-ல் பட்டப்படிப்பை முடித்து, 1979-ல் பட்டம் பெற்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.