எமர்ஜென்சி காலத்தில் தலைமறைவாக இருந்த மோடி எப்படி பி.ஏ. தேர்வு எழுதினார்? கேட்கிறது ஆம் ஆத்மி
டெல்லி: எமர்ஜென்சி காலத்தில் தலைமறைவாக இருந்ததாக கூறும் பிரதமர் மோடி அதே ஆண்டில் பி.ஏ. தேர்வு எழுதியது எப்படி என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடிக்கு டெல்லி பல்கலைக்கழகம் அளித்த பி.ஏ. பட்டம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் அளித்த எம்.ஏ. பட்டத்தை டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் பகிரங்கமாக வெளியிட்டனர்.
ஆனால் இந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அஸூதோஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மோடியின் பி.ஏ. சான்றிதழில் கல்வியாண்டு 1977 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு சான்றிதழில் படிப்பை 1978-ம் ஆண்டு படித்து முடித்ததாக காட்டுகிறது. அவரது எம்.ஏ. டிகிரி பட்டச் சான்றிதழில் மாணவர் சேர்க்கை எண் குறிப்பிடப்படவில்லை. இது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது.
1975-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட கல்விச் சான்றிதழுடன் கூடிய மதிப்பெண் பட்டியலில் அவரது பெயர் நரேந்திர குமார் தாமோதரதாஸ் மோடி என்று காணப்படுகிறது. அதே நேரத்தில் 1976-ம் ஆண்டில் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்றும் உள்ளது. இதற்கான அத்தாட்சி உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யாமல் ஒரு பெயரின் ஒரு பகுதியை திடீர் என நீக்கம் செய்ய முடியாது.
அவசரநிலை சட்டமான மிசா நடைமுறையில் இருந்த 1975-1977ஆம் ஆண்டுகளில் தாம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக மோடி ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். அதே காலகட்டத்தில் 1977-ம் ஆண்டில் பி.ஏ. பட்டம்பெற்றதாகவும் மோடியின் சான்றிதழ் கூறுகிறது.
அப்படியானால் அப்போது எந்த ஊரில் உள்ள மையத்தில் தேர்வு எழுதினார்? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக கேள்வி எழுப்பிய அரவிந்த் கேஜ்ரிவால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவதை விட்டுவிட்டு, இதைப்போன்று மோசடியாக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களை வெளியிட்டதற்காக மக்களிடம் அமித் ஷாவும், அருண் ஜேட்லியும்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அஸூதோஷ் கூறினார்.