எங்கே செல்லும் இந்த பாதை.. மோடியின் பொருளாதார கொள்கை பற்றி மன்மோகன் 'கமெண்ட்'
டெல்லி: மோடியின் பொருளாதார கொள்கைகள், இலக்கு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு எதையும் செய்யவில்லை என்ற மோடியின் பிரசாரம், நல்ல நோக்கம் கொண்டதல்ல. இந்தப் பொய்களை நாம் அம்பலத்துக்கு கொண்டு வரவேண்டும்.
இலக்கே இல்லாமல் சென்று கொண்டிருக்கிற தற்போதைய மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒப்பிடுகிறபோது, பொருளாதார வளர்ச்சிக்கு காங்கிரஸ் செய்த பங்களிப்பை வரலாறு சொல்லும்.
நாட்டின் விவசாயத்துறை வளர்ச்சிக்கு ஜவகர்லால் நேருவும், இந்திரா காந்தியும்தான் காரணம். தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களிடம் இருந்து பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டை ஒவ்வொரு விதத்திலும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச்சென்றவர் இந்திரா காந்தி. அவர் பிரதமராக பதவி ஏற்றபோது நாட்டில் உணவுப்பற்றாக்குறை இருந்ததால், விவசாய துறையில் அக்கறை செலுத்தும்படி அவர் விஞ்ஞானிகளை அறிவுறுத்தினார். அப்படி பிறந்ததுதான் பசுமைப்புரட்சி.
வறுமையை ஒழிப்பதில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொள்கை வகுப்பு நிலையில், குறிப்பிட்ட முக்கியத்துவம் தர வேண்டும். அந்த வகையில், வறுமையை ஒழிப்பதில் திட்டக்கமிஷன், முக்கிய பாதை வகுத்துத்தந்தது. ஆனால் இன்றைக்கு திட்டக்கமிஷனை ஒழித்துக்கட்டி விட்டார்கள்.
திட்ட கமிஷனை மோடி ஒழித்துக்கட்டியதின் மோசமான விளைவுகள் பற்றி மக்களிடம் தொண்டர்கள் எடுத்துச்சொல்ல வேண்டும். மோடியின் பொருளாதார கொள்கைகள் இலக்கு இல்லாதவை. அவற்றை கவனித்து வாருங்கள்.
இளைஞர்களை இளைஞர் காங்கிரசார் ஒன்று திரட்ட வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
சாதுவான அரசியல் தலைவர் என்ற பெயர் எடுத்து வந்த மன்மோகன் சிங், இப்போது ஆவேச அரசியல்வாதியாகிவருவது கண்கூடு. சமீபத்தில் டெல்லியில் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் 125வது பிறந்த நாள் கொண்டாட்ட நிறைவு விழாவிலும் மோடிக்கு எதிராக, மன்மோகன் சிங் சாட்டை வீசியது குறிப்பிடத்தக்கது.