ஸ்கூல் விட்டவுடன் வெங்காயம் விற்க செல்வேன்: சொல்கிறார் சாய்வாலா மோடியின் அமைச்சர்
டெல்லி: பள்ளி பருவத்தில் தனது தாய்க்கு உதவியாக வெங்காயம் விற்பனை செய்ததாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்த மசோதா விரைவில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில்,
குழந்தை தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய என்.ஜி.ஓ.க்கள் கொடுத்த அழுத்தம் தான் காரணம். நான் பச்பன் பசாவ் அந்தோலன் உள்பட பல என்.ஜி.ஓ.க்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினேன்.
புதிய சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்டோரை பணியமர்த்த தடை விதிக்கப்படுகிறது. 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கடினமான வேலைகள் அளிக்கக் கூடாது.
அதே சமயம் 14 முதல் 18 வயது வரை உள்ளோர் குடும்பத்தார் நடத்தும் மளிகை கடை உள்ளிட்ட கடினம் இல்லா வேலைகளை செய்ய அனுமதிக்கப்படுகிறது. நான் கூட சிறு வயதில் பள்ளி நேரம் முடிந்த பிறகு எனது தாய்க்கு உதவியாக வெங்காயம் விற்றுள்ளேன் என்றார்.