பாதுகாப்பு விவகாரம்: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடி மனைவி மேல்முறையீடு
அகமதாபாத்: தனது பாதுகாப்பு குறித்து தான் கோரிய விவரங்களைத் தர குஜராத் காவல் துறை மறுத்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக குஜராத்தின் மேஹ்ஸனா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது:
நான் பிரதமரின் மனைவி. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களையும், அது குறித்த அரசு உத்தரவு நகல்களையும் தரக்கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மாவட்டக் காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்திருந்தேன்.
நான் கோரிய விவரங்கள், மாநில உளவுத் துறைக்குத் தொடர்புடையவை என்றும், குஜராத் உள்துறையின் தீர்மானத்தின்படி, தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து மாநில உளவுத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; அவற்றைத் தர முடியாது என்றும் துணை கண்காணிப்பாளர் பதில் அனுப்பியுள்ளார்.
ஆனால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கும், மாநில உள்துறைக்கும் தொடர்பு இல்லை. சிலரது தலையீட்டின் காரணமாகவே எனக்கு விவரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. எனவே, நான் கோரிய விவரங்களைத் தரும்படி காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு தமது மேல்முறையீட்டில் யசோதா பென் தெரிவித்துள்ளார்.
மேஹ்ஸானா மாவட்டம் ஊஞ்சா நகரில் தனது சகோதரருடன் யசோதாபென் வசித்து வருகிறார். அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் உள்பட 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.