எனக்கான பாதுகாப்பு விவரம் என்ன? கேட்டது பிரதமர் மோடி மனைவி! நிராகரித்தது குஜராத் போலீஸ்!!
டெல்லி: தமக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் கேட்டிருந்த விவரத்தை தர மறுத்துவிட்டது குஜராத் போலீஸ்.
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். இவர் மோடியுடன் திருமணமான சில நாட்களில் பிரிந்து விட்டார். குஜராத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். அதே நேரத்தில் மோடியுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
இதனிடையே லோக்சபா தேர்தலில் மோடி வேட்புமனுத் தாக்கல் செய்த போதுதான் தமக்கு மனைவி ஒருவர் இருக்கிறார் என்ற விவரத்தை தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பையும் விமர்சனங்களையும் கிளப்பியது.
நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற பின்பும் மோடி தனது மனைவியுடன் இணைந்து வாழவில்லை. இந்த நிலையில் யசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்ற அடிப்படையில் குஜராத் போலீசார் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதனால் தனக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தனக்கு எந்தெந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் போலீசுக்கு யசோதா பென் மனு அனுப்பி இருந்தார்.
மேலும் யார் பாதுகாப்புக்கு வருகிறார்கள்? யார் போகிறார்கள் என்பது தெரியாததால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர்கள் விவரம் என்ன என்றும் அவர் கேட்டு இருந்தார்.
பாதுகாப்பு குறித்து அவருக்கு பதில் அளிக்க குஜராத் போலீசார் மறுத்து விட்டனர். இது பற்றி மேசானா மாவட்ட போலீஸ் அதிகாரி மோதாலியா யசோதா பென்னுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உள்ளூர் உளவுத் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்த உள்ளூர் உளவுத் தகவல்களை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அதனால் யசோதா பென் கோரிய தகவல்களை அளிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.