மோடி யோகா நிகழ்ச்சியை தீவிரவாதிகள் சீர்குலைக்க வாய்ப்பு... எச்சரிக்கும் உளவுத்துறை
டெல்லி: பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து யோகா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலாவது சர்வதேச யோகா தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியில் உலக சாதனை படைக்கும் வகையில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன இந்த நிலையில் நாளை நடைபெறும் யோகா நிகழச்சியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்
பலூன்கள், பட்டங்கள், போன்ற பறக்கும் பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பை அதிகரிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
5000 போலீசார்
இதையடுத்து யோகா நிகழ்ச்சி நடைபெறும் இந்தியா கேட் பகுதியைச் சுற்றி சுமார் 5 ஆயிரம் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் 30 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களும் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தினத்தைப் போல
குடியரசு தினத்தன்று செய்யப்படுவதைப் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை சிறு குடியரசு தினம் போல கருதுவதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
45 நிமிடங்கள்
பிரதமரும், மத்திய அமைச்சர்களும் 45 நிமிடங்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அப்போது 30,000 பேர் வரை இந்தியா கேட் பகுதியில் குவிவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காலை 7 மணிக்கு
ராஜபாதை பகுதியில் காலை 7 மணிக்கு பிரதமர் கொடியேற்றி வைத்து யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார். கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பறக்கும் பொருட்களுக்குத் தடை
யோகா நிகழ்ச்சி நடைபெறும் ராஜபாதை பகுதியில் பட்டங்கள், பலூன்கள், ஒளிரும் சிறு விளக்குகள் போன்றவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறு விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ள போலீசார் புகைப்படம் எடுக்க கூட அவற்றை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
உளவுத்துறை அலெர்ட்
பிரதமர் மோடி வெளிநாட்டு தூதர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கை டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.