பீகாரிகளே உங்களுக்கு இந்த வருஷம் 2 தீபாவளி.. மோடி பேச்சு
சப்ரா, பீகார்: பீகார் மக்களுக்கு இந்த வருடம் 2 தீபாவளி வருகிறது. முதல் தீபாவளியை நவம்பர் 8ம் தேதி அவர்கள் கொண்டாடுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி வருவதையே இப்படிக் குறிப்பிட்டுள்ளார் மோடி.
பீகார் மாநிலம் சப்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில் இப்படிக் குறிப்பிட்டார். மோடியின் பேச்சிலிருந்து...
இது கூட்டம் அல்ல, திருவிழா
இது கூட்டம் அல்ல. பெரிய திருவிழா, மாபெரும் மக்கள் கூட்டம் இது. இதிலிருந்தே மக்கள் எழுதப் போகும் தீர்ப்பு என்னவென்று தெரிகிறது.
2 தீபாவளி
பீகாருக்கு இந்த வருடம் 2 தீபாவளி வருகிறது. முதல் தீபாவளி நவம்பர் 8ம் தேதி. அதற்கான கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கி விட்டன.
லே - லடாக் போல
லே லடாக்கில் நடந்த தேர்தலில் பாஜக வென்றுள்ளது. அந்த அலை இப்போது பீகார் பக்கமும் வீசுகிறது. பீகாரிலும் பாஜகவே வெல்லப் போகிறது.
வளர்ச்சியைக் கொண்டு வருவேன்
நான் பீகாருக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவேன். மீண்டும் 2019 லோக்சபா தேர்தலுக்காக நான் தைரியமாக இங்கு வாக்கு சேகரிக்க வருவேன். சொன்னதைச் செய்து விட்டு வருவேன்.
நாங்க பேசுவது என்ன.. அவர்கள் பேசுவது என்ன?
நாங்கள் எங்களது கூட்டங்களில் வளர்ச்சி பற்றிப் பேசுகிறோம். ஆனால் அவர்களோ (நிதீஷ், லாலு) மோடி மோடி என்று எனது பெயரை மட்டுமே கூறி வருகின்றனர். மோடிக்கு மக்களின் ஆசி என்றும் உண்டு என்பதை அவர்கள் அறியவில்லை என்றார் மோடி.