பனிமலையோ... பாலைவனமோ... வீரர்களுடன் தான் என் தீபாவளி... நெகிழ வைத்த பிரதமர் மோடி..!
ஜெய்ப்பூர்: பனிமலையோ பாலைவனமோ வீரர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனது தீபாவளி எனக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில் இந்தாண்டும் மேற்கு எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள லோங்கேவாலாவில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார் மோடி. அப்போது வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி... உங்கள் வீரத்துக்கு ஈடு இணையில்லை என பேச்சு..!
நாட்டு மக்களின் அன்பை சுமந்துகொண்டு உங்களிடம் வந்திருப்பதாக வீரர்களிடம் கூறிய மோடி ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்பதாக அவர்களுக்கு உற்சாகமூட்டினார். வீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினால் தனது தீபாவளி கொண்டாட்டம் நிறைவானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார் மோடி.
மேலும், வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஊடுருவ முயன்ற தருணத்தில் மேஜர் குல்தீப் தலைமையிலான வீரர்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்ததாக பெருமிதம் தெரிவித்தார். இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கும் தீரத்திற்கும் ஈடு இணையாக எதையும் கூற முடியாது என அவர்களை கவுரப்படுத்தினார் மோடி.
மக்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இல்லங்களில் மக்கள் தீபங்களை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.