"மோடி, அமித்ஷா, அருண்ஜேட்லி" மும்மூர்த்திகளால்தான் பீகாரில் பா.ஜ.க.வுக்கு தோல்வி.. சொல்வது அருண்ஷோரி
டெல்லி: பீகாரில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைய காரணமே பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகிய மூவர்தான் என்று மூத்த பா.ஜ.க. தலைவர் அருண்ஷோரி சாடியுள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அருண்ஷோரி அளித்துள்ள பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடி தமது ஆட்சியின் 6 மாத காலத்தை நிறைவு செய்த பின்னர் கடந்த ஓராண்டாக அவருக்கும் அமித்ஷாவுக்கும் அருண் ஜேட்லிக்கும் எதிராக ஒரு அமைதியான ஒத்துழையாமை இயக்கம் பா.ஜ.க.வுக்குள் நடைபெற்று வருகிறது. சில பா.ஜ.க. எம்.பிக்கள் வெளிப்படையாகவே எப்படியெல்லாம் பிரதமர் மோடி தங்களை அங்கீகரிக்கவில்லை என விவரித்திருக்கின்றனர்.
பா.ஜ.க.வில் இது மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் இந்த எதிர்ப்பு பகிரங்கமாகவும் வெடிக்க வாய்ப்பும் இல்லை.
பீகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அருண் ஜேட்லி மூவரும்தான் காரணம். இந்த மூவரைத் தாண்டி ஆட்சியிலோ கட்சியிலோ 4வது நபர் யாரும் இல்லை.
பீகாரில் மோடியை மையமாக வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. லோக்சபா தேர்தலின் போது கருப்புப் பணத்தை பறிமுதல் செய்து ரூ15 லட்சம் தருவோம் என உறுதி அளித்தார் மோடி. அதற்காக மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் அது தேர்தல் பேச்சு என அமித்ஷா கூறுகிறார்... ஆகையால் மக்கள் பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நம்ப தயாரில்லை.
இவ்வாறு அருண் ஷோரி கூறியுள்ளார்.