ராகுல் காந்தி கட்டிதானே பிடித்தார்.. எழுந்திருக்கச் சொன்னதாக சொல்றாரே பிரதமர்!
டெல்லி: ராகுல் காந்தி காலையில் இன்று போட்ட போட்டிற்கு இரவில் பிரதமர் நரேந்திர மோடி சரியான பதிலடி தரத் தவறினார். மாறாக ராகுலை கிண்டலடித்தார் மோடி. மேலும் திசை திருப்பும் வகையிலும் பேசினார் மோடி.
ராகுல் காந்தி பதவிக்காக அலைபவர் என்பது போல பிரதமர் மோடி கூறியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொதிப்படைந்து கோஷமிட்டனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி இன்று இரவு நீண்ட உரையாற்றினா். அப்போது அவர் ராகுல் காந்தியை கிண்டலடித்து நக்கலடித்துப் பேசினார்.
பிரதமர் பேசுகையில், காலையில் வாக்கெடுப்பு முடியவில்லை. விவாதமும் முடியவில்லை. ஆனால் ஒரு உறுப்பினர் என்னிடம் ஓடி வந்து எழுந்திரியுங்கள், எழுந்திரியுங்கள் என்கிறார். அவருக்கு பதவிக்கு வர ஏன் இந்த அவசரம்?
அந்த உறுப்பினருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டு மக்கள்தாந் என்னைத் தேர்ந்தெடுத்தனர். 125 கோடி இந்தியர்கள் தேர்ந்தெடுத்த பிரதமர் நான். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுத்துத்தான் இந்த அவைக்கு வந்துள்ளோம். பதவியில் அமர்ந்துள்ளோம் என்றார் பிரதமர் மோடி.
இன்று காலை நடந்த விவாதத்தின்போது படு அனலாக பேசிய ராகுல் காந்தி பேச்சின் முடிவில் மோடியிடம் போய் கட்டி அணைத்து கை கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார். இதைத்தான் இரவுப் பேச்சின்போது குறிப்பிட்ட மோடி, ஆனால் தன்னை ஆட்சியை விட்டுப் போகுமாறு ராகுல் கூறியது போல பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.