ரகுராம் ராஜன் பற்றி கமெண்ட்.. சு.சுவாமியை டிவி பேட்டியில் வறுத்தெடுத்த மோடி! அர்ணாப்பிடம் ஆவேசம்
டெல்லி: அரசு நிர்வாகத்தைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை, விளம்பர பேச்சு நாட்டுக்கு பலன்தராது என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை விமர்சனம் செய்த பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமியை பெயரை குறிப்பிடாமல் வறுத்தெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமராக பதவியேற்ற பிறகு தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு தனது முதல் பிரத்யேக பேட்டியை மோடி அளித்தார். டைம்ஸ் நவ் என்ற அந்த ஆங்கில சேனலின் ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.
உங்களது ராஜ்யசபா எம்.பி. ஒருவர் ரகுராம் ராஜன் குறித்து கூறிவரும் கருத்துக்கள் ஏற்புடையதுதானா என்று, அர்ணாப் கோஸ்வாமி கேள்வி எழுப்பினார். சுப்பிரமணியன்சுவாமிதான், சமீபகாலமாக ரகுராம் ராஜனை விமர்சனம் செய்து வந்தார். அவர் மனதளவில் இந்தியர் இல்லை என்பது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.
காரணம்
பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், நிதி அமைச்சர் பதவிக்காகவும், சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு காய் நகர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.
தேவையில்லை
இந்நிலையில், சர்ச்சை குறித்து மோடி கொஞ்சம் காட்டமாகவே பதிலளித்தார். அவர் கூறியது: எனது கட்சிக்குள் இருந்து அந்த குரல் வருகிறதோ அல்லது வெளியே இருந்து வருகிறதோ, அது பற்றி கவலையில்லை, ஆனால், இது தேவையில்லாத கருத்து.
விளம்பர நோக்கம்
விளம்பர நோக்கத்திற்காக கூறப்படும் அதுபோன்ற கருத்துக்களால் நாட்டுக்கு பலன் கிடைக்காது. ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேம்டும். அரசு நடைமுறையைவிடவும் நான் தான் பெரிய நபர் என்று எவரேனும் நினைத்தால், அது தவறு.
தெளிவாக உள்ளேன்
எனக்கு ரகுராம் ராஜன் பற்றி எந்த குழப்பமும் கிடையாது. நம்மைவிட அவரின் தேசப்பற்று எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது. 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற உடனேயே ரகுராம் ராஜனை நீக்க முயல்வேன் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் முழு சுதந்திரத்தோடு பதவியில்தான் உள்ளார்.
|
நாட்டு பற்று
ரகுராம் ராஜன் இனி எங்கு பணியாற்றினாலும்கூட அவர் இந்திய நலனை மனதில் வைத்துதான் பணியாற்றுவார் என்பது உறுதி. இவ்வாறு மோடி தெரிவித்தார்.